திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை அவ்வப்போது கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாநில திட்டக் குழு உறுப்பினர் மற்றும் செயலர் பாலாஜி கேட்டுக்கொண்டார்.
மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் சுகாதா ரம், கல்வி, வேளாண்மை, தொழில், கிராம வளர்ச்சி ஆகியவை சமச்சீர் வளர்ச்சியடைய மாநில திட்டக்குழு மூலம் சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் திருவாரூர் கலெக் டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில திட்டக் குழு உறுப்பினரும், செயலருமான பாலாஜி தலைமை வகித்தார். கலெக்டர் நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி, டி.ஆர்.ஒ மணி மாறன், மாவட்ட திட்ட இயக்குநர் பாண்டியன், மாவட்ட ஊராட்சி செயலர் ராஜகோபால், சுகாதார துறை துணை இயக்குநர் பரணிதரன், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்ட இணை இயக்குநர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாநில திட்டக் குழு உறுப்பினர் பாலாஜி பேசுகையில்
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மூலம் மொத்தம் 1430 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு வட்டாரங்கள் மற்றும் ஊராட்சியில் உள்ள பல கிராமங்களிலும் சமச்சீரான வளர்ச்சி இல்லாமல் இருந்து வருகிறது. எனவே மாவட்ட அளவில் மற்றும் வட்டார அளவில், வட்டாரத்தில் உள்ள ஊராட்சி அளவில் அவசியமாக உள்ள திட்டங்கள் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த முறையில் அதற்கான நிதியினை பெற சம்மந்தப்பட்ட துறைகளின் இரண் டாம் நிலை அலுவலர்கள் மூலம் சம்மந்தப்பட்ட பகுதிகளில் தேவையான திட்டங்களை தொகுத்து பின்னர் மாவட்ட நிர்வாகம் மூலம் மாநில திட்டக் குழுவிற்கு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் வளர்ச்சி என்பது அந்த பகுதியின் சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில், ஊரக வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுவதால் இதற்கான திட்டங்களை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் சேர்க்கை, வருகை, தேர்ச்சி விகிதம் போன்றவைகள் குறித்து கல்வி துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இதில் குறைபாடுகள் இருந்தால் அதற்கான காரணத்தை உடனடியாக கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்..

Post a Comment