BJP ஆதரிக்கும் மாநில கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும் : உலமா சபை ! !

11/18/20130 comments


மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் BJP மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஜமாஅத்துல் உலமா சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஷரீஅத் விழிப்புணர்வு மாநாடு நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சபையின் மாநில தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். சபையின் மாநகர தலைவர் சாகுல்ஹமீது மன்பஈ வரவேற்றார். காஜா முகையுதீன் பாகவி சிறப்புரையாற்றினார். 
மாநாட்டு நிறைவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:


* முஸ்லிம்களுக்கு எதிராக பி.ஜே.பி. கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே எதிர்வருகிற நாடாளுமன்றத்தேர்தலில் அந்தக் கட்சியை புறக்கணிப்பது. அந்த கட்சியுடன் தேர்தலில் கூட்டணி வைக்கும் தமிழக அரசியல் கட்சிக்கு ஒட்டுப்போடக்கூடாது.

* நாடாளுமன்றத்தேர்தலில் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரணியாக வாக்கு சேகரிக்க வேண்டும்.

* இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

* குழந்தை திருமண பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களின் சிவில் உரிமைகளில் தலையிடுவதை வன்மையாக கண்டிப்பது.

* கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கராத் மிஸ்ராவின் பரிந்துரையை மத்திய அரசு உடனே அமுல்படுத்த வேண்டும்; மாநில அரசில் வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அதிரிக்க வேண்டும்.

* பல்வேறு வழக்குகளில் குற்றசெயலில் ஈடுபடாமல் சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
* நாட்டில் நடக்கும் அனைத்து தீவிரவாத செயல்களுக்கும் முஸ்லிம்கள் மீது பழி சுமத்துவதை கண்டிப்பது.

* முஸ்லிம் இளைஞர்கள், சிறுவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மக்தப் மதரஸாக்களை திறம்பட நடத்த பள்ளிவாசல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது.

* அவசர கதியில் வழங்கப்படும் தலாக்கால் பாதிக்கப்படும் அப்பாவி பெண்களின் நிலையை கருத்தில் கொண்டு, திருமணத்துக்கு முன்பு வழங்கப்படும் தடையில்லா சான்றிதழில் நிபந்தனைகள் விதிப்பதை கட்டாயமாக்குவது.

* வணக்க வழிபாடுகள், வாழ்வியல் நடைமுறைகளில் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் அடிப்படையில் அமைந்த மத்ஹபு சட்டங்களையே பின்பற்ற வேண்டும்.

* பாலியல் வன்கொடுமைகள், ஆசிட் வீச்சுகள் போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டிப்பது.

* முஸ்லிம் பெண்கள் பர்தாவைப் பேணி நடக்க வலியுறுத்துவது.

* இமாம்களை காரணமின்றி திடீரென்று பணி நீக்கம் செய்வதற்கு முன்பு பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகம், ஜமாஅத்துல் உலமா சபைக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.

* உலமா ஓய்வூதிய பயனாளிகளை அதிகரிக்க வேண்டும்; ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் முஹம்மது யூசுப் உலவி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரபீக் மிஸ்பாகி செய்து இருந்தார்.

- இப்னு ரஷிதா
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech