திருவாரூர் மாவட்ட அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டிகள் வரும் 26ம்தேதி நடைபெறுகிறது.
இது குறித்து திருவாரூர் கலெக்டர் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவாரூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டு போட்டிகள் வரும் 26ம்தேதி காலை 7 மணியளவில் திருவாரூர் தென்றல் நகரில் உள்ள மின்னொளி பூப்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களும் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம்.
இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் வசிப்பதற்கான அடையாள அட்டையின் நகலை போட்டி நடைபெறும் இடத்தில் அளிக்க வேண்டும். போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். அவ்வாறு மாநில அளவில் வெற்றி பெறும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7ஆயிரத்து 500, மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதுகுறித்து மேலும் விவரம் அறிய திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகம் தொலைபேசி எண் 04366 227158 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Post a Comment