தேக்கு மர கடத்தல் விவகாரம் மர அறுவை பட்டறைகளில் வனத்துறை அதிரடி சோதனை முத்துப்பேட்டையில் பரபரப்பு

11/07/20140 comments


முத்துப்பேட்டையில் முறை கேடாக தேக்கு மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக செய்தி வெளியானதை தொடர்ந்து, மர அறுவை பட்டறைகளில் நேற்று வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பல இடங்களில் வனத்துறை கட்டுப்பாட்டில் தேக்கு மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் மரங்களை சிலர் அனுமதியின்றி வெட்டி கடத்துவதாகவும், தேக்கு மரங்கள் ஏற்றிய மாட்டு வண்டி, லோடு ஆட்டோ, வேன் ஆகியவை அடிக்கடி முத்துப்பேட்டை நகரில் உலா வருகிறது எனவும் தினகரனில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.  

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் பார்த்திபன் உத்தரவுப்படி, மன்னார்குடி வனசரக அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில், திருத்துறைப்பூண்டி வனவர் சுந்தரேசன், வனக்காவலர் கணபதி, தோட்டக் காவலர்கள் ரவி, நல்லசிவம், ஜீவா ஆகியோர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று முத்துப்பேட்டை பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான தேக்கு மரங்கள் வளர்க்கப்படும் இடங்களில் மரங்கள் எதுவும் வெட்டப்பட்டுள்ளதா என அதிரடி சோதனை நடத்தினர். மேலும் பல இடங்களில் உள்ள மரம் அறுவை பட்டறைகளில் அதிரடியாக உள்ளே புகுந்து சோதனை நடத்தினர். அப்போது முறைகேடாக தேக்கு மரங்கள் எடுத்துவரப்படுகிறதா என பட்டறை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

மேலும் தினகரனில் வெளியான படத்தில் காணப்பட்ட மாட்டு வாண்டியை கண்டு பிடித்து அதன் உரிமையாளர் செம்படவான் காட்டை சேர்ந்த ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தினர். அதில் அந்த மாட்டு வண்டியில் எடுத்துச்சென்றது கிளோரியா வகை மரம் என்று தெரியவந்தது. அந்த மரங்கள் வெட்டப்பட்ட பேட்டை பகுதியைச் சேர்ந்த இட உரிமையாளர் ரத்தினகுமாரிடம், முறையாக மரங்கள் வெட்டப்பட்டதா விசாரணை நடத்தப்பட்டது. 

மேலும் கிளோரியா மரங்கள் வெட்டப்பட்ட இடத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். வனத்துறையினரின் இந்த அதிரடி சோதனை முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech