திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் சங்கேந்தி கடைத் தெருவில் உள்ள பேருந்து நிலையக்கட்டிடம் 5ஆண்டுகளுக்கு முன்பு முன்னால் தி.மு.க எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் சார்பில் நிதி ஒதிகீட்டில் கட்டப்பட்டது. அந்த பேருந்து நிலையத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் அந்த பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமான செயல்கள் நடந்து வந்தது.
மேலும் பேருந்து நிலையம் கட்டிடத்தில் விளம்பர போஸ்டர்கள் முழுவதும் ஒட்டப்பட்டு பயனிகள் நிழல் வாங்கச்கூட ஒதுங்க முடியாத நிலையில் அசுத்தமாக காட்சி அளித்தது. இதனால் மேலும் வியாபாரிகள் தேவையற்ற பொருட்களை பேருந்து நிலையத்துக்குள் கொட்டி அசுத்தமாக இருந்து வந்தது. அதே போல் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் கூடாரமாகவும் செயல்பட்டு வந்தது. இது குறித்து சென்ற ஆண்டு இந்த பேருந்து நிலையத்தைச் சுத்தம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரனில் செய்தி வெளியானது. அதன் பிறகு ஒரு சில முறை மட்டுமே சுத்தம் செய்த ஊராட்சி நிர்வாகம் நாலடைவில் அந்த பணி செய்வதை நிறுத்திவிட்டது.
இதனால் மீண்டும் பேருந்து நிலையம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அசுத்தமாக இருந்து வந்தது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி சிவதாஸ்(55) என்பவர் இது குறித்து சங்கேந்தி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கடந்த ஒரு ஆண்டாக மாதத்திற்கு இரு முறை பேருந்து நிலையத்தில் ஒட்டப்படும் விளம்பர போஸ்டர்களை சுரண்டி அகற்றி விட்டு பேருந்து நிலையத்தைத் தண்ணீரால் கழுவி விட்டு விட்டு செல்கிறார்.
தொடர்ந்து இந்த பணியை செய்து வரும் சிவதாஸை பார்த்து பொதுமக்கள் பாராட்டி வருகின்றார்கள். இது குறித்து சிவதாஸ் கூறுகையில்: இந்த பேருந்து நிலையத்தைச் சுத்தமாக்க பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் பலனில்லை. அதனால் கடந்த ஒரு வருடமாக மாத்திற்கு இரு முறை நானே சுத்தம் செய்து வருகிறேன்.
பொது நலத்துடன் செய்து வரும் இந்த பணியால் எனக்கு மனநிறைவு ஏற்படுவதுடன் கடின உழைப்பு எனது உடல் ஆரோக்கியத்தையும் தருகிறது என்றார்.
நன்றி:முகைதீன் பிச்சை ரிப்போட்டர்

Post a Comment